Saturday, April 5, 2014

பங்கு சந்தை ஓர் அறிமுகம்

பங்கு சந்தை மற்றும் பங்கு வர்த்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆவலா! மேலும் உங்களுக்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விருப்பமா? இப்பகுதியில் பங்கு சந்தை மற்றும் பங்கு வர்த்தகம் பற்றிய அடிப்படை விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சிகொள்கிறோம்! இ-வணிக உலாவிகள் பங்கு சந்தை பற்றிய தங்கள் அறிவை பெருக்கிகொள்வதே இப்பகுதியின் நோக்கமாகும்!


பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - முன்னுரை

கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக நம் நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் கூட பங்கு சந்தை பற்றி பேசுவது ஒரு வழக்கமாக ஆகி விட்டது. பங்கு சந்தையில் முதலீடு செய்யாவிட்டால் அது ஒரு பெரிய இழுக்கு என்று கூட சிலர் நினைக்கும் அளவு பங்கு சந்தை பற்றிய ஒரு வித மோகம் நிறைய பேருக்கு இருந்தது என்னவோ உண்மை.

பங்கு சந்தையில் நல்ல லாபம் வரும் போது அனைவரும் சந்தோஷமாக ஏற்றுகொண்டார்கள். அப்போது கூட சிலர் இது சூதாட்டம் என்று சொல்லி கொண்டுதான் இருந்தார்கள். பணம் சம்பாதிப்பவர்களோ இது என் திறமை என்று சொல்லி கொண்டார்கள், இது ஒரு சூதாட்டம் என்று சொல்லிகொண்டிருந்தவர்களில் அநேகம் பேர் பணத்தை இழந்தவர்களாக இருந்தார்கள்.

உண்மையிலேயே பங்கு சந்தை சூதாட்டமா அல்லது நியாயாயமாக பணம் சமாதிக்கும் ஒரு வழியா? இது பற்றி ஒரு தெளிவு வேண்டும் என்றல் நாம் நிறைய விஷயங்களை அலச வேண்டியிருக்கும். பங்கு சந்தையின் அடிப்படையில் இருந்து ஆரம்பித்து அதிலுள்ள சாதக பாதகங்களை எல்லாம் அலச வேண்டியிருக்கும்.

அப்படி பட்ட ஒரு அலசலை நாம் இந்த தொடரில் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் லாபம் ஈட்டினாலும் சரி நஷ்டம் அடைந்தாலும் சரி, அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டியது நமக்கு மிக மிக அவசியமானது. எனவே இந்த தொடரில் அது பற்றி அலசலாம்.

பங்கு சந்தை பற்றி பேச போகிறோம் என்றதும் இது ஒரு டெக்னிக்கல் சம்பந்த பட்ட ஒரு விஷயம் என்று நினைத்துவிட வேண்டாம். அடிப்படையில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக மேற்கொண்டு தெரிந்து கொள்வோம்.

ஆக நமக்கெல்லாம் தெரிந்த ஒரு வார்த்தை பங்கு சந்தை. பங்கு சந்தை என்றால் பங்குகளை விற்கும் இடம் என்று நம் அனைவருக்கும் தெரியும். "பங்கு" என்றால் என்ன

பங்கு என்றால் என்ன?

ஒரு தொழில் நடத்த முதலீடு வேண்டும். அந்த முதலீட்டை ஒருவரே செய்தால் அவரை உரிமையாளர் என்கிறோம். அதாவது அந்த தொழிலில் இருந்து வரும் லாப நஷ்டங்கள் அவர் ஒருவரையே சேரும். இதை "Proprietorship" என்கிறோம். அதே முதலீட்டைஇரண்டு அல்லது மூன்று பேர் சேர்த்து செய்தல் லாப நஷ்டங்கள் அதனை பங்குதாரரையும் சேரும். இதை "Partnership" என்கிறோம்.
மேலே சொன்ன முறையில் பெரிய அளவிலான மூலதனத்தை திரட்டுவது கஷ்டமான காரியம். உதாரணமாக ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்வது என்பது இயலாத காரியம். ஆக நிறய முதலீடு தேவைப்படும் தொழில் என்றால் அதுக்கு பணத்தை நிறைய பேரிடம் முதலீடாக வாங்கி லிமிடெட் கம்பெனி ஆரம்பிக்க படுகிறது. அப்படி லிமிடெட் கம்பெனி ஆரம்பிக்கும் போது, முதலீட்டை சிறு சிறு பாகங்களாக பிரித்து (பங்கு) ஒவ்வொருவரும் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது தான் பங்கு முதலீடு என்பது.
சரி ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்கிவிட்டோம் (எப்படி பங்கு வாங்கலாம் என்பது பற்றி அப்புறம் எழுதுகிறேன்). நமக்கு பணம் தேவை படும் போது அந்த பங்குகளை விற்க நினைக்கிறோம் என்றால் யாரிடம் விற்பது? இதற்காத உருவாக்க பட்டதுதான் பங்கு சந்தை. இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நிறுவனத்தில் பங்கு வாங்கியிருந்தாலும், அந்த நிறுவனம் நம்மிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்காது. ஒரு நிறுவனம் தான் வெளியிட்ட பங்குகளை திரும்ப வாங்குகிறது என்றால், அது தன்னுடைய மூலதனத்தை திருப்பி கொடுக்கிறது என்று அர்த்தம். அப்படி திருப்பி கொடுத்தால் அந்த நிறுவனம் எப்படி தொழில் செய்ய முடியும்? ஆக ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டு பணம் பெற்றுகொண்டது என்றால், அந்த பணத்தை அந்த நிறுவனம் திருப்பி தராது. நிறுவனத்தை மூடும் சூழ்நிலை வந்தால் மட்டுமே, மூடியதும் கடன்களை எல்லாம் அடைத்து விட்டு மீதி ஏதாவது பணம் இருந்தால் மட்டுமே ஷேர் வாங்கியவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கும்.
இப்படி பொதுமக்களிடம் இருந்து முதலீடாக வாங்கிய பணத்தை வைத்து கம்பெனியை நிர்வாகம் செய்வது யார்? proprietorhsip என்றால் முதலாளியாக இருக்கும் நபர் நிர்வாகத்தை கவனித்து கொள்வார். Partnership என்றால் Partners நிர்வாகத்தை கவனித்து கொள்வார்கள். கம்பனியில் முதலீடு செய்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாது. எனவே கம்பனி நிர்வாகம் குறிப்பிட்ட சில நபர்களிடம் ஒப்படைக்கப்படும். கம்பனியை நிர்வகிக்கும் நபர்களை Board of Directors என்று சொல்கிறோம். கம்பனியை ஆரம்பிக்க முயற்சி எடுத்தவர் கம்பனியில் அதிக ஷேர் வைத்திருப்பார். அவர் தலைமை பொறுப்பில் இருப்பார் (சத்யம் ராஜு மாதிரி) .
ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும் போது அல்லது அதன் விருவாக்கதிற்கு பணம் தேவை படும் போது ஷேர் வெளியிடும். அப்படி வெளியிடப்படும் ஷேர்களை நாம் நேரடியாக கம்பனியிடமே வாங்கிகொள்ளலாம். ஒரு நிறுவனம் முதன்முறையாக ஷேர் வெளியிடும் போது அதை IPO (Initial Public Offer) என்கிறோம்.
கம்பனி ஷேர் வெளியிடும் போது நம்மால் வாங்க முடியவில்லை என்றால், அதே கம்பனி பங்குகளை நாம் எப்படி வாங்குவது? இங்குதான் பங்கு சந்தை என்னும் இடம் தேவைப்படுகிறது. ஆக நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்கவோ அல்லது ஒரு கம்பனி நல்ல நிலையில் செயல்படுகிறது என்று முடிவு செய்து அந்த கம்பனியில் பங்குகளை நாம் வாங்க வேண்டும் என்றாலோ நாம் நாட வேண்டிய இடம் பங்கு சந்தை. பங்கு சந்தையில் பங்குகள் பரிவர்த்தனை செய்வதில் உள்ள பணம் கம்பனிக்கு போய் சேராது. அது பங்கு வாங்குபவர் விற்பவரோடு முடிந்து விடும். இப்போது நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். கம்பனிக்கு எந்தவித லாபமும் இல்லாமல் ஏன் பங்குகளை பங்கு சந்தையில் அனுமதிக்கிறது? ஏனென்றால் அந்த கம்பனியில் முதலீடு செய்தால் எப்போ வேண்டுமானாலும் நம் பணத்தை நாம் பங்கு சந்தை மூலமாக பங்குகளை விற்று எடுத்துக்கொள்ள முடியும் என்று முதலீட்டளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதுவுமில்லாமல், பங்கு சந்தையில் பங்குகளின் விலை அதிகமானால் கம்பனியை ஆரம்பிதவருடைய பங்குகளின் மதிப்பும் கூடும். இதுதான் பங்கு பரிவர்த்தனை அல்லது பங்கு சந்தையின் அடிப்படை.
பங்குகளை வாங்குவது விற்பது எப்படி, பங்குகளை தெரிவு (select) செய்வது எப்படி, என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

பங்குகள் - வாங்குவதும் விற்பதும்
ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டதும் அதை வாங்கிய பங்குதாரர்களுக்கு அந்த நிறுவனத்தின் முத்திரை பதிக்கப்பட்ட ஒரு பங்கு பத்திரம் (share certificate) கொடுக்கும். நாம் படித்து வாங்கும் பட்டம் போலவே பங்கு பத்திரமும் அச்சடித்து கொடுக்கப்படும். ஒவ்வொரு பத்திரத்திற்கும் வரிசை எண் (share certificate number) இருக்கும். ஆக ஒவ்வொரு பங்குதாரரும் தான் வாங்கிய பங்குக்கு ஒரு பங்கு பத்திரம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பங்குக்கும் ஒவ்வொரு பத்திரம் என்று இல்லாமல் ஒரு நபர் எத்தனை பங்கு வாங்கியிருக்கிறார் என்பது பங்கு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுவனமும் பங்குதாரர் பதிவேடு (shareholders register) வைத்திருக்கும். அதில் பங்கு பாத்திரத்தின் எண், அதை வாங்கியவரின் பெயர், முகவரி, அவர் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை இப்படி அந்த பங்கு பத்திரம் மற்றும் பங்குதாரர் பற்றிய விபரங்கள் அனைத்தும் இருக்கும்.
பங்கு வாங்கியவர் பங்குகளை விற்கவேண்டும் என்றால், அந்த பங்கு பத்திரத்தின் பின்புறம் பங்கை விற்பவரும் அவரிடமிருந்து பங்கு வாங்குபவரும் கையொப்பமிட வேண்டும். கையொப்பமிடப்பட்ட பங்கு பத்திரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும். அதன் பிறதுதான் புதிதாத வாங்கியவரின் பெயருக்கு பத்திரம் மாறும். இதில் நிறைய நடைமுறை சிக்கல் இருந்தது. உதாரணமாக, பங்கு விற்றவரின் கையொப்பம் சிறிது வித்தியாசமாக இருந்தாலும் இந்த விற்பனை செல்லாது என்று நிறுவனத்தால் நிராகரிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் எல்லாம் சரியாக இருந்தாலும், நிறுவனத்திற்கு கையொப்பமிட்ட பத்திரத்தை தபாலில் அல்லது courier மூலமாக அனுப்பி, அதை நிறுவனம் பெற்றுக்கொண்டு அனைத்தையும் சரி பார்த்து, பங்குதாரர் பதிவேட்டில் பங்கு உரிமையாளர் பெயர் மாற்றி பங்கு பத்திரத்தை திரும்ப அனுப்பித்தர நிறைய நாட்கள் ஆகும். மேலும் ஒருவர் பங்கு வாங்க வேண்டும் என்றாலும் விற்க வேண்டும் என்றாலும் புரோக்கரிடம் சொல்லிவைத்து அவர்கள் விரும்பிய விலையில் பங்கு பரிவர்த்தனை நடைபெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. புரோக்கர் மனது வைத்தால் நல்ல விலையில் பங்கு நமக்கு கிடைக்கும் என்று புரோக்கரை பிரதானமாக நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்படி பட்ட நடைமுறை சிக்கல்கள் எல்லாம் இப்போது இல்லை.
இப்போதும் நிறுவனம் பங்குதாரர் பதிவேடு வைத்திருக்கிறது, ஆனால் பங்கு பத்திரத்தை அச்சடித்து கொடுப்பதற்கு பதிலாக "Dematerialization" என்று அழைக்கப்படும்"Demat" முறை வந்து விட்டது. இந்த முறைப்படி, பங்கு அச்சடிக்கும் வேலை எல்லாம் இல்லை. எலக்ட்ரானிக் முறைப்படி பங்குகள் அனைத்தும் கணினி மூலமாகவே கொடுக்கப்படுகிறது. இப்படி பங்குகள் கணினி மூலமாக இருப்பதால் நாமும் Demat account என்று சொல்லப்படும் Demat கணக்கை தொடங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு முறை புரோக்கரை தொடர்பு கொண்டு சில ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்தோமென்றால் நம் பெயருக்கு Demat accountதொடங்கப்படும். Demat account தொடங்கிய பின் நம்முடைய Demat ஐ வைத்து கணினி மூலமாக நாமே நேரிடையாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இங்கே நாம் நேரிடையாக என்று குறிப்பிடுவது புரோக்கரிடம் சொல்லி வைத்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், விற்பவருக்கும் வாங்குபவருக்கும் கிட்டத்தட்ட நேரடி தொடர்பு போல் ஒரு வித செயல்பாட்டின் மூலம் பரிவர்த்தனை நடைபெறுகிறது.
"BSE", "NSE" என்றெல்லாம் தொலைக்காட்சியிலோ பத்திரிக்கையிலோ நீங்கள் தினமும் பார்த்திருப்பீர்கள். நாம் Demat account ஆரம்பித்த பின், நம்முடைய Demat மூலமாக மும்பை பங்கு சந்தை என்று சொல்லப்படும் BSE மற்றும் தேசிய பங்கு சந்தை என்று சொல்லப்படும் NSE ஆகிய இரண்டு பங்கு சந்தைகளிலும் நாம் நேரிடையாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு வாங்கி இரண்டே நாளில் நம்முடைய Demat-ல் நாம் வாங்கிய பங்கு வரவு வைக்கப்படும். Demat என்பது நம்முடைய வங்கி கணக்கு மாதிரிதான். நம்முடைய வங்கி கணக்கில் நாம் பணம் செலுத்தினால், நம் கணக்கில் எப்படி வரவு வைக்கப்படுகிறதோ அதே மாதிரி தான் Demat-ம். நாம் வாங்கிய பங்குகள் வரவு வைக்கப்படும், வாங்கிய பங்குகளை விற்றால் நம்முடைய Demat கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
ஆக இன்றைய சூழ்நிலையில் Demat இருந்தால்தான் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடியும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த Demat account எப்படி ஆரம்பிப்பது? Demt ஆரம்பிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு பங்கு புரோக்கரை அணுக வேண்டும். உதாரணமாக ICICI, Kotaksecurities, Indiainfoline, Indiabulls இப்படி நிறைய புரோக்கர்கள் இருக்கிறார்கள். இவர்களது அலுவலகத்தை தொடர்பு கொண்டால் Demat ஆரம்பிக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்களே முடித்து தருவார்கள். நாம் ஒரு புரோக்கரிடம் Demat ஆரம்பித்தால் அதில் அவர்களுக்கு என்ன லாபம்? எதுவுமே இலவசமாக கிடைப்பதில்லையே..! நாம் Demat ஆரம்பித்தால் வருடா வருடம் Demat கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை நம்மிடம் வசூலிப்பார்கள். இது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை நாம் அந்த Demat மூலமாக பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் நாம் வாங்கிய அல்லது விற்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை நம்மிடம் புரோக்கர் கட்டணமாக வசூலிப்பார்கள். இந்த கட்டணங்கள் ஒவ்வொரு புரோக்கருக்கும் மாறுபடும். அதனால் Demat ஆரம்பிக்கும் முன் கட்டண விஷயங்களை விசாரித்துப் பார்த்து அதன் பிறகு எந்த புரோக்கர் என்று முடிவு செய்து Demat ஆரம்பிப்பது நல்லது.

பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி?

முந்தைய பதிவில் Demat பற்றி பார்த்தோம். பங்கு சந்தையில் பங்குகளை வாங்க விற்க Demat தேவை என்பதை பற்றி பார்த்தோம். இனி பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது சம்மந்தமாக சில விஷயங்களை பார்ப்போம்.
பங்கு சந்தை என்றதுமே எல்லோருக்கும் அது ஒரு பணம் காய்க்கும் மரம் என்ற எண்ணமே வருகிறது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் நமது பணத்தை பங்குச்சந்தையில் எப்படி கையாளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவாகும். பங்கு சந்தையில் கீழ்க்கண்ட மூன்று விதமாக சம்பாதிக்கலாம்.
1. நீண்ட கால முதலீடு
2. குறுகிய கால முதலீடு
3. தின வர்த்தகம்
1. நீண்ட கால முதலீடு (Long-term Investment) : ஒரு நிறுவனத்தில் நாம் முதலீடு செய்கிறோம் என்றால், அந்த நிறுவனம் வளர வளர நம்முடைய முதலீடும் வளரும். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதைதான் செய்வார்கள். பணத்தை முதலீடு செய்துவிட்டு குறைந்தபட்சம் மூன்று வருடம் காத்திருப்பார்கள். மூன்று வருடம் என்பது நிர்ணயிக்கப்பட்ட காலம் இல்லை. அது மூன்று வருடமாக இருக்கலாம் அலல்து அதற்கு மேலும் இருக்கலாம். சிலர் பத்து வருடம் கூட காத்திருப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் அந்த முதலீடு நல்ல லாபத்தை தரும். உதாரணமாக இன்போசிஸ் நிறுவன பங்கில் 2002-ல் ஒரு பங்குக்கு 458 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 2007 இல் 2337 ரூபாய் கிடைத்திருக்கும் - யோசித்து பாருங்கள் நான்கு மடங்குக்கு மேல் வருமானம். இது தான் முதலீடு செய்வதில் இருக்கும் பயன். இப்படி வருடக்கணக்காக காத்திருக்க யாருக்கு பொறுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?? அப்படியானால் நீங்க கீழே உள்ள ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. குறுகிய கால முதலீடு (Short, Medium-term Investment) : இந்த வகை முதலீட்டாளர்கள் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றமாதிரி பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்பார்கள். இந்த குறுகிய காலம் என்பதற்கு எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாது. சில நேரம் ஒரு வருடம் இருக்கலாம், சில நேரம் ஆறு மாதம் இருக்கலாம், அவ்வளவு ஏன்? ஒரு வாரம் கூட இருக்கலாம். அதாவது பங்குகளை வாங்கி ஒரு வாரத்திற்குள்ளாக கூட விற்று விடுவார்கள்.
3. தின வர்த்தகம் (Day trading): இந்த முறையில் தினமும் காலையில் பங்குகளை வாங்கி அன்று மாலை பங்கு சந்தை முடியும் முன் விற்று விடுவார்கள். இதில் காலையில் வாங்கத்தான் வேண்டும் என்பதில்லை, காலையில் விற்று விட்டு - நம்மிடம் பங்கு இல்லாமலேயே விற்றுவிட்டு - அன்றைய தினம் முடியும் முன் திரும்ப வாங்கி, வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள வித்தியாசத்தில் லாபம் பார்பார்கள். இது மிக மிக ரிஸ்க் ஆன ஒரு விஷயம். தின வர்த்தகத்தில் அதிக லாபம் பார்க்கலாம் என்று நினைக்கும் நாம் அதே அளவுக்கு நஷ்டமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கே ரிஸ்க் அதிகமோ அங்கே லாபம் (return) அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இப்படி மூன்று வகையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம் என்று இருக்கும் போது எது நல்லது என்ற கேள்வி வரும். நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீடு என்று சொல்கிறோம். ஏனென்றல், அவர்கள் தன்னுடைய பணத்தை அந்த நிறுவனத்தின் பாங்கில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது அந்த நிறுவனம் செய்யும் தொழிலில் பங்கெடுக்கிறார் என்று பொருள், எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை நாமும் பார்க்க முடியும்.
நீண்டகால முதலீட்டை தவிர பிற இரண்டு வகையையும் வர்த்தகம் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில்trading என்று சொல்கிறோம். இந்த வகையில் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்கிறவர்களின் ஒரே குறிக்கோள், விலை கூடியதும் இந்த பங்கை விற்று லாபம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான். இங்கே நாம் பங்கு வாங்கியிருக்கும் நிறுவனம் நல்லபடியாக தொழில் செய்யவேண்டும், அந்த நிறுவனம் லாபம் பார்க்க வேண்டும், அந்த லாபத்தின் மூலமாக நம்முடைய பங்கின் விலை கூட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லாமல், அப்போது இருக்கும் செய்தி மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் லாபம் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.
முதலில் நீங்க என்ன செய்ய ஆசைபடுகிறீர்கள் என்பதை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அதற்கேற்ற மாதிரி நம்முடைய திட்டமிடலும் இருக்க வேண்டும். நீங்கள் முதலீட்டாளராக விரும்புகிறீர்களா அல்லது வர்த்தகராக விரும்புகிறீர்களா என்று முடிவு செய்வதற்கு முன் நாம் சில அடிப்படை விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொண்ட பிறகு நீங்களே முடிவு செய்யலாம்...!! பங்கு சந்தையில் பணத்தை போடும் முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குமுன் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஓன்று. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எப்படி நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்வது? இதற்குத்தான் செய்தித்தாள் மற்றும் பங்குச்சந்தை சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை பார்க்க வேண்டும். அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக இன்போசிஸ் மென்பொருள் துறையில் இருக்கிறது என்பது போல், நாம் வாங்க நினைக்கும் நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த தொழிலின் எதிர்கால வாய்ப்புக்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இன்றைய சூழ்நிலையில் மென்பொருள், ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகும் என்று நமக்கு தெரியும். அதே மாதிரி, உள்கட்டமைப்பு, பவர் மற்றும் FMCG என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும்/விற்கும் தொழில் அதிக பாதிப்புக்குள்ளாகாது என்று சொல்லப்படுகிறது.
இப்படி நிறுவனம் செய்யும் தொழில் மற்றும் அது இருக்கும் துறையை பற்றி தெரிந்தபின், குறிப்பிட்ட நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அந்த நிறுவனத்தின் நிதி விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account) மற்றும் நிதிநிலை அறிக்கையினை ஆராயந்து அறிய வேண்டும்.

No comments:

Post a Comment